
முதலில் ஔவையாரின் வரலாறு
ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார்.
தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண முடிக்கும் போது தமக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதாவது அவர்கள் ஊர் ஊராகச் சென்று ஆலய தரிசனம் செய்வ தென்றும், தாம் போகும்வழியில் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவ்வூரிலேயே விட்டுச் செல்வதாகவும் சபதம் எடுத்துக் கொண்டனர். அப்படியாக அவர்களுக்குப் பிறந்த முதன் மகன் “திருவள்ளுவர்” எனவும் ஏழாவது பெண் குழந்தையாக ஒளவை, “பாணரகம்” என்ற ஊரில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கூறுகின்றது.
அதாவது
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்ற குறளே திருவள்ளுவர் எழுதிய முதற் குறளாகும். அதில் குறிப்பிட்டுள்ள “ஆதி பகவன்” என்பது “சிவன் உமை” யைக் குடிறிப்பிடுவதாகவும் அதே நேரத்தில் தனது தாய் தந்தையராகிய ஆதி பகவனைக் குறிப்பிடுவதாகவும் அறியப்படுகிறது.
திருவள்ளுவர், இரு வரிகளில் எழுதிய திருக்குறளை, இருவரியில் உள்ள குறள் என்று கூறி தமிழ்ச்சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் வரலாறு கூறுகின்றது.
திருக்குறளை “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்.” என ஔவையார் குறிப்பிடுகிறார்.
இவர் காலத்தில் வாழ்ந்த அதியமான் நெடுமான் என்ற அரசன் ஔவையின் பக்தியையும், தமிழ்ப் புலமையையும் வியந்து அவர்பால் உள்ள பற்றினால், ஒளவைக்கு மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனியை கொடுத்ததாகவும் அதனை உண்ட அவ்வையார் காலத்தை வென்று பலகாலம் வாழ்ந்தார் எனவும் வெவ்வேறு காலகட்டத்தில் பல பாடல்களை எமக்களித்தாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
இருந்தும் சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி வெவ்வேறு காலகட்டத்தில் ஒளவை எனும் பெயரில் மூன்று அல்லது நான்கு தமிழ்ப் பெண் புலவர்கள் ஒருமித்த குணாதி சயங்களோடும், புலமையோடும் வாழ்ந்துள்ளதாகவும் எமக்குப் பாடல்கள் தந்தாகவும் கூறப்படுகிறது.
அவர்களின் கூற்றுப்படி முதலாம் ஒளவை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலகட்டத்தில் வாழ்ந்ததாகவும், இரண்டாம் ஒளவை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.
ஔவையார் இளம் பிராயத்திலிருந்தே தமிழ்ப் பற்றும் தமிழில்ப் புலமைத்துவமும் உள்ளவராக விளங்கினார். விநாயகக் கடவுள் மீது அளவு கடந்த பக்தியுள்ளவராகவும் இருந்தார். தினந்தோறும் விநாயகருக்கு பூசைகள் செய்து வழிபட்ட பின்னரே அவரது அன்றாடக் கடமைகளை ஆரம்பிப்பார். இவ்வாறாக இவர் வளர்ந்து கன்னிப் பருவத்தை அடைந்தபோது இவரை வளர்த்த இவரது பெற்றோர்கள் இவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். திருமணத்தை விரும்பாத ஔவையார் விநாயகரிடம் சென்று முறையிட்டு பூசைகள் செய்து, விரதமிருந்து வழிபட்போது அதனை ஏற்றுக் கொண்ட விநாயகர் அவருக்கு முதுமைக் கோலத்தினை வழங்கியதாகவும் அன்று முதல் எல்லோரும் அவரை “ஔவைப் பிராட்டி” என அழைத்ததாகவும் அறியப் படுகிறது.
அதியமான் நெடுமான் என்ற அரசனிடமிருந்து பெற்ற மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக் கனியை உண்டதனால் அந்த முதுமைக் கோலத்திலேயே நீண்ட காலம் வாழ்ந்து விநாயகரை வழிபட்டு பூசைகள் செய்து விநாயகர் மூலமாக, யோகத்தின் மூலம் முத்தியடையும் தத்துவத்தை அறிந்து அதனை எமக்கு “விநாயகர் அகவல்” என்ற ஞான நூலாகத் தந்துள்ளார். அந்த யோக முறையைப் பின்பற்றி அவ்வையாரும் முக்தி அடைந்தார்.
ஔவையாரும் ஒரு சித்தராகவே வணக்கப்படுகிறார்.